தஞ்சாக்கூரில் ஆக்கிரமிப்பால் மாயமான  7 ஊருணிகளை மீட்க ஆட்சியர் உத்தரவு: நில அளவீடு பணி தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் தஞ்சாக்கூர் கிராமத்தில் மாயமான 7 ஊருணிகளை மீட்க

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் தஞ்சாக்கூர் கிராமத்தில் மாயமான 7 ஊருணிகளை மீட்க சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளதையடுத்து, நில அளவைத்துறையினர் ஆக்கிரமிப்பு ஊருணிகளை அளவீடு செய்யும் பணியை தொடங்கியுள்ளனர்.
தஞ்சாக்கூரில் கண்ணத்தாள், ராணி, தோப்புகார, வண்ணான், அரசரடி, பட்டூருணி, நத்தம் கணக்கர், சுப்பிரமணியம், அய்யனார் ஆகிய 9 ஊருணிகளை அப்பகுதியை ஆண்ட தஞ்சை வாணன் மன்னன்  பல நூற்றாண்டுகளுக்கு முன் வெட்டியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை  இந்த ஊருணிகள் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. காலப்போக்கில்  ஊருணிகளையும், வரத்துக் கால்வாய்களையும் சிலர் ஆக்கிரமித்தனர். இதனால் ஊருணிகள் மண் மேவி, சீமைக்கருவேல மரங்கள் முளைத்து, இருந்த சுவடு தெரியாமல் மறைந்தன. 
ஒன்பது ஊருணிகளில் சுப்பிரமணியம், அய்யனார் ஊருணிகளைத் தவிர, 7 ஊருணிகள் மாயமாகின. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.ஏ.பாலசுப்பிரமணியன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சமீபத்தில் தஞ்சாக்கூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊருணிகளை சீரமைக்க உத்தரவிட்டது. 
இந்த உத்தரவு நகலை காட்டி ஊருணிகளை மீட்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து ஊருணிகளை மீட்டு தூர்வார ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.  
இதைத்தொடர்ந்து மானாமதுரை பகுதி வருவாய்துறையின் நில அளவீட்டுத்துறையினர் மூலம் நில அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதில் ஊருணி, வரத்துக் கால்வாய்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்தது தெரியவந்துள்ளது. ஓரிரு நாள்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ஊருணிகள் சீரமைக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com