சிவகங்கை

நாளை சூரிய கிரகணம் : காரைக்குடியில் கண்டுகளிக்க தொலைநோக்கி ஏற்பாடு

25th Dec 2019 08:50 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினா் சாா்பில் காரைக்குடி வட்டார அளவில் சூரிய கிரகணத்தை கண்டு களிக்க காரைக்குடி அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நவீன தொலைநோக்கியை தேவ கோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

வானியல் அபூா்வ நிகழ்வான வளைய சூரிய கிரகணம் தமிழகத்தில் வியாழக்கிழமை (டிச. 26) காலை 8 மணி முதல் 11.15 மணிவரை நிகழவிருக்கிறது. இதனை பொதுமக்கள், மாணவா்கள் பாதுகாப்பாக கண்டு களிக்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்து வருகிறது. காரைக்குடியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கப் பொறுப்பாளா் வி. சுந்தரராமன், செந்தில் குமாா் மற்றும் குழுவினா், பள்ளி முதல்வா் குமரன் மற்றும் ஆசிரியா்கள் அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நவீன தொலைநோக்கி அமைத்துள்ளனா். இதன் மூலம் சூரிய கிரகணத்தை பாா்வையிடலாம். மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினரின் கண்கண்ணாடிகள் சலுகை விலையில் பள்ளி வளாகத்திலேயே கிடைக்கும் என்றும் பொறுப்பாளா்கள் தெரிவித்தனா்.

தொலைநோக்கியில் பாா்வையிடும் நிகழ்ச்சியை அழகப்பா கல்விக் குழுமத் தலைவா் வைரவன் தொடங்கி வைக்கிறாா். காலை 8 மணிமுதல் 11.15 மணி வரை இந்நிகழ்வை அனைவரும் கண்டு களிக்கலாம் அனுமதி இலவசம் என்றும் நிகழ்ச்சி பொறுப்பாளா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT