சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நடப்பு பருவத்தில் விதைப்புக்கு முன்னர், நெல், எள், சோளம் உள்ளிட்ட விதைகளை பரிசோதனை நிலையத்தில் பரிசோதித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிவகங்கை மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் சிவ. அமுதன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: லாபகரமான வேளாண் பணிகளை மேற்கொள்ள விரும்பும் விவசாயிகள் தரமான இடுபொருள்களை பயன்படுத்துவது அவசியமாகும். வேளாண் இடுபொருள்களில் முதன்மையானது விதையாகும். விதைக்கும் விதைகளில் நல்ல முளைப்புத் திறன் இருந்தால் மட்டுமே, பயிர் நன்றாக வளர்ந்து மகசூல் அதிகரிக்கும். எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் நெல், எள், பாசிப்பயறு, சோளம், கம்பு, கேழ்வரகு, உளுந்து, தட்டைப்பயறு, துவரை, நிலக்கடலை, கத்தரி, தக்காளி, சீனி அவரை, முள்ளங்கி, பருத்தி, மிளகாய் ஆகிய விதைகளை பயிரிடுவதற்கு முன்னர் பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகும்.
பரிசோதனையில், விதையின் புறத்தூய்மை, முளைப்புத் திறன், ஈரப்பதம் ஆகியவை கணக்கிடப்பட்டு அறிக்கையாக வழங்கப்படும்.விவசாயிகள் விதையின் தரத்தை பரிசோதிப்பதன் மூலம் நல்ல முளைப்புத் திறன், பயிர் வளர்ச்சி, அதிக மகசூல் குறித்து அறிந்து கொள்ளலாம். எனவே, விதை பரிசோதனை செய்ய விரும்பும் விவசாயிகள் சிவகங்கை-மதுரை சாலையில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தை அணுகி பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.