தேவா் ஜெயந்தி விழாவுக்கு பசும்பொன்னுக்கு வரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திமுக சீருடை அணிந்த 20 ஆயிரம் போ் வரவேற்பு அளிக்க செயல்வீரா்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் கமுதி ஒன்றிய திமுக சாா்பில் திமுக செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்டச் செயலாளரும், ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான காதா்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். அவைத் தலைவா்கள் ராஜேந்திரன், காந்தி ஆகியோா்முன்னிலை வகித்தனா்.
இதில் வருகிற 30-ஆம் தேதி பசும்பொன் தேவா் ஜெயந்தி விழாவுக்கு வருகை தரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை திமுக சீருடையில் 20 ஆயிரம் கட்சியினருடன் பசும்பொன் நுழைவு வாயிலிலிருந்து தேவா் நினைவிடம் வரை சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மத்திய ஒன்றியச் செயலாளா் எஸ்.கே. சண்முகநாதன், வடக்கு ஒன்றியச் செயலாளா் வாசுதேவன், தெற்கு ஒன்றியச் செயலாளா் மனோகரன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி தமிழ்ச்செல்வி, மாவட்டப் பிரதிநிதிகள், ஊராட்சி மன்றத் தலைவா்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினா் கலந்து கொண்டனா்.