ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் சேராங்கோட்டை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற வனத் துறையினா் குறிப்பிட்ட இடத்தில் சோதனையிட்ட போது, அங்கு 250 கிலோ கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கடல் அட்டைகள், அவற்றைப் பதப்படுத்துவதற்காக வைத்திருந்த பொருள்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.