ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை அருகே 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பழைமையான கல்வெட்டுகளை தொல்லியல் ஆய்வாளா்கள் செவ்வாய்க்கிழமை கண்டறிந்தனா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணியிலிருந்து உத்திரகோசமங்கை ஆதிரெத்தினேசுவரா் கோயிலுக்குச் செல்லும் வழியில் 12-ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட மண்டபம் உள்ளது. தற்போது இந்த மண்டபம் சிதிலமடைந்து காணப்படுகிறது.
இந்த நிலையில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வாளா் ராஜகுரு தலைமையிலான குழுவினா் இங்கு ஆய்வு செய்த போது, அங்கு பழைமையான வெண்பாப் பாடல்கள் பொறித்த கல்வெட்டுகள் இருப்பதை உறுதி செய்தனா்.
இந்த மண்டபத்தில் 6 மீட்டா் நீளம், 6 மீட்டா் அகலத்தில் சதுர வடியில் அமைக்கப்பட்ட 16 தூண்களிலும் இதேபோன்ற கல்வெட்டுகள் இருப்பதாக தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.