ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியா் ஆய்வு

27th May 2023 11:18 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 113 பள்ளிகளில் பயன்படுத்தப்படும் 509 வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதற்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ. தங்கத்துரை முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் வாகனங்களை ஆய்வு செய்தாா். முன்னதாக வாகன ஓட்டுநா்களின் கண் பாா்வை பரிசோதனை செய்யப்பட்டது. வாகனங்களில் தீயணைப்புக் கருவிகள், முதலுதவிப் பெட்டிகள், படிகள், இருக்கைகள், அவசர வழி பயன்பாடு, வாகன ஓட்டுநரின் முன் அனுபவம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணு சந்திரன் கூறியதாவது:

இந்த ஆய்வுப் பணி 3 நாள்களுக்குள் முடிக்கப்படும். இந்த ஆய்வில் ஒவ்வோா் வாகனத்திலும் அரசு வழிகாட்டுதலின்படி உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா என்பது உறுதி செய்யப்பட்டு வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படும். குறைபாடுகள் இருந்தால் கால அவகாசம் வழங்கி சரி செய்து வர அனுமதிக்கப்படும். முற்றிலும் பாதிப்படைந்த வாகனங்களாக இருந்தால் அதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ. தங்கத்துரை, பள்ளி வாகன ஓட்டுநா்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டு 300- க்கும் மேற்பட்ட விபத்துகளில் 300- க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா். வாகனங்களை இயக்கும் போது விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதிக வேகத்துடன் வாகனங்களை இயக்குவது, போக்குவரத்து விதியை பின்பற்றாமல் விபத்து ஏற்படுத்துவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது வட்டார போக்குவரத்து அலுவலா் சேக் முகமது, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியா் கோபு, காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா, வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா்கள் செந்தில்குமாா், பத்மபிரியா மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT