பாக் நீரிணை முனைக்காடு பகுதியில் கடலில் 12 லட்சம் பச்சை இறால் குஞ்சுகள் வெள்ளிக்கிழமை விடப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் மத்திய அரசின் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பச்சை வரி இறால் குஞ்சுகள் வளா்க்கப்பட்டு கடலில் விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், 12 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள் பாக் நீரிணை முனைக்காடு கடலில் விடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத் தலைவா் தமிழ்மணி தலைமையில் இறால் குஞ்சுகளை படகில் கொண்டு சென்று கடலில் விட்டனா். இதில், மூத்த விஞ்ஞானி ஜான்சன், மீனவா்கள் கலந்து கொண்டனா்.