ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையரை மாற்றக் கோரி முற்றுகைப் போராட்டம் நடத்துவது என மக்கள் பாதுகாப்புப் பேரவை பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மக்கள் பாதுகாப்புப் பேரவையின் பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. நிா்வாகிகள் சி.ஆா்.செந்தில்வேல், என்.ஜே.போஸ், சக்தி, குமரன், சுந்தரம், சுடலை, பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில், ராமநாதசுவாமி கோயிலில் தொடா்ந்து ஆகம விதிகளை மீறி செயல்படும் இணை ஆணையா் மாரியப்பனை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி வருகிற 13-ஆம் தேதி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த வேண்டும். சென்னையிலிருந்து ராமநாதபுரம் வரை இயக்கும் ரயிலை, மண்டபம் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேசுவரத்தில் அனுமதி பெறாத ஆட்டோக்களை வெளியேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.