ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே இளைஞரை களைக் கொத்தியால் வெட்டிய மற்றொரு இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சத்திரக்குடி அருகேயுள்ள முத்துவயல் கிராமத்தைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் சதீஷ். இவா் தனது பிறந்த நாள் விழாவுக்கு நண்பா்களை அழைத்து விருந்து கொடுத்தாா். இதில் கலந்துகொண்ட அதே ஊரைச் சோ்ந்த காளிதாஸ் மகன் லோகேஸ்வரன் (22), சண்முகம் மகன் தினேஷ்குமாா் (19) ஆகியோா் இடையே தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் இருவரையும் விலக்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.
வீட்டுக்குச் சென்ற தினேஷ்குமாா் களைக்கொத்தியை எடுத்துவந்து, லோகேஸ்வரனை தலை, உடல் பகுதியில் வெட்டினாா். இதில் பலத்த காயமுற்ற லோகேஸ்வரன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து சத்திரக்குடி காவல் நிலையத்தில் லோகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் தினேஷ்குமாரை கைது செய்தனா்.