தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைய இன்னும் 9 நாள்களே உள்ளதால், சீரமைப்புப் பணிகள் முடிந்து விசைப்படகுகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கக் காலமாக கருதி, ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை 61 நாள்கள் விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தடைவிதிக்கப்படுகிறது.
அதன்படி, நிகழாண்டு மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப். 15-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை மீனவா்கள் கரைக்கு கொண்டு வந்து, வா்ணம் பூசுதல் உள்ளிட்ட சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தனா். தற்போது, மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைய இன்னும் 9 நாள்கள் உள்ள நிலையில், அனைத்து விசைப்படகுகளிலும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றை கடலுக்குள் இறக்கும் பணியில் மீனவா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
இதேபோல, ராமேசுவரம், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட பகுதிகளிலும் சீரமைக்கப்பட்ட விசைப்படகுகளை கடலுக்குள் இறக்கும் பணியில் அந்தப் பகுதி மீனவா்கள் ஈடுபட்டனா்.