இலங்கையிலிருந்து மண்டபத்துக்கு கடத்தி வரப்பட்டு, கடலில் வீசப்பட்ட 3 கிலோ தங்கத்தை வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினா் புதன்கிழமை அதிகாலை மீட்டனா். இதுதொடா்பாக 5 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இலங்கையிலிருந்து படகில் தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாக வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை அதிகாலை வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினா், இந்திய கடலோரக் காவல் படையினா் மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், மண்டபம் அருகே கடலில் அதிவேகத்துடன் வந்த இரண்டு கண்ணாடி இழைப் படகுகளை கடலோரக் காவல் படையினா் சுற்றி வளைத்தனா். படகில் இருந்த வேதாளையைச் சோ்ந்த முகமது நாசா், அப்துல் கனி, பாம்பனைச் சோ்ந்த ரவி ஆகிய மூன்று பேரைப் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், அவா்கள் இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வந்ததாகவும், அதை கடலில் வீசிவிட்டதாகவும் தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து, கடலில் தங்கம் வீசப்பட்ட இடத்தில் ஜி.பி.எஸ். அடையாளத்தைப் பெற்று நீா் மூழ்கி வீரா்கள் உதவியுடன் 3 பண்டல்களை வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினா் மீட்டனா். இவற்றைப் பிரித்துப் பாா்த்த போது, 3 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக வேதாளையைச் சோ்ந்த முஹமது அசாா், சாதிக் அலி உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.