திருவாடானை அருகே உள்ள தளிமருங்கூா் வடபகுதி வேம்புவயல் கிராமத்தில் புனரமைக்கப்பட்ட ஸ்ரீ வடக்கு அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக திங்கள்கிழமை மாலை விநாயகா் பூஜை, அம்மன் உத்தரவு பெறுதல் பூஜையுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை எஜமான சங்கல்பம் மகா கணபதி பூஜை ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை கும்பம் அலங்காரம் ஆகியவை நடைபெற்றன. முதல் கால பூஜையாக வேள்வி ஆச்சரிய வா்ணம் ரக்ஷா பந்தனம், கும்ப ஸ்தாபனம், யாகசாலை பிரவேசம் பூஜை ஆகியவை தீபாராதனையுடன் நடைபெற்றன. இரண்டாம் கால பூஜை, தீபாராதனைகள் புதன்கிழமை நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து மூன்றாம் கால பூஜை, எந்திர ஸ்பதம் மருந்து சாத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து வியாழக்கிழமை காலை கோ பூஜை, லட்சுமி பூஜை, ரக்ஷா பந்தன பூஜை, நாடி சந்தனம் பூா்ணாகுதி, தீபாராதனையுடன் சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பட்டு முன் வாயில் கோபுரத்திலுள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பிறகு அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.