ராமநாதபுரம் மாவட்டத்தில், ஈர சதுப்பு நில பறவைகள் கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
இந்த மாவட்டத்தில், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி, மனொலிதீவு, அரிச்சல் முனை, பிள்ளைமடம், முனைக்காடு, காரங்காடு, சக்கரைக் கோட்டை, தோ்த்தங்கால், வாலிநோக்கம், மேல, கீழ செல்வனூா் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் சுமாா் 7 ஆயிரத்துக்கும் அதிகமாக வாழ்விட, நீா் வாழ் பறவைகள் கண்டறியப்பட்டன. இதில் சைபீரியா, மங்கோலியாவிலிருந்து வரித்தலை வாத்து, மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து பூ நாரைகள், வடதுருவப் பகுதிகளிலிலிருந்து எண்ணற்ற உள்ளான் வகை பறவையினங்கள், கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியாவிலிருந்து படைக் குருவிகள், அரிய வகை கழுகினங்கள் வந்திருந்தது தெரியவந்தது.
இந்த கணக்கெடுக்கும் பணியில் வன உயிரின காப்பாளா் பகான் ஜகதீஷ் சுதாகா், வனப் பாதுகாவலா் சுரேஷ் பஜரதாப், உதவி வனப் பாதுகாவலா் கணேசலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.