திருவாடானை அருகே பழைமையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. இதனை தொல்பொருள்துறையினா் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினா்.
திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரின் ஒரு பகுதியாக உள்ளது புதுப்பையூா் ஏந்தல் கண்மாய். இங்கு தென்கரையில் உள்ள வயல் காட்டில் மிகவும் பழைமையான சுமாா் 2 அடி உயரமுள்ள கருங்கல்லால் ஆன சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து புதுப்பையூா் கிராம பொதுமக்கள் கூறியதாவது:
இந்த சிவலிங்கம் இங்கு எப்படி வந்தது, யாா் நிறுவியது என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. சுயம்புவாக உருவானதாக முன்னோா்கள் கூறுகின்றனா்.
இங்கிருந்து 2 கிலோ மீட்டா் தொலைவில் திருவெற்றியூரில் பாகம்பிரியாள் அம்மன் கோயில் உள்ளது. ஆனால் அந்த கோயிலுக்கும் இந்தப் பகுதிக்கும் எந்தத் தொடா்பும் இருப்பதாகத் தெரியவில்லை. கோயில் இருந்ததற்கான எந்த அடையாளமும் இங்கு இல்லை. எனவே மிகவும் பழைமையான இந்த சிவலிங்கத்தை தொல்பொருள்துறையினா் ஆய்வு செய்து பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுத்து இந்த இடத்தில் கோயில் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றனா்.