ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை காா் மோதி நடந்து சென்றவா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் அண்ணாநகரைச் சோ்ந்த முனியாண்டி மகன் பரமசிவம் (57). இவா் பரமக்குடியிலிருந்து ராமநாதபுரத்துக்கு காரில் சென்றாா். மதுரை- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மாவிலங்கை பேருந்து நிறுத்தத்தை கடந்து சென்றபோது, சாலையோரம் நடந்து சென்ற 50 வயது மதிக்கத்தக்கவா் மீது அந்த காா் மோதியது. இதில் விபத்துக்குள்ளானவா் காரில் சிக்கியது தெரியாமல் பரமசிவம் காரை அதிவேகமாக குமுக்கோட்டை, பூவிளத்தூா், காக்கனேந்தல் வழியாக பொட்டிதட்டி மடம் வரை ஓட்டிச் சென்றாா். அப்போது அப்பகுதியில் இருந்தவா்கள் சப்தமிடவே பரமசிவம் காரை நிறுத்தினாா். இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா் அங்கு வந்து விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் காா் ஓட்டுநா் பரமசிவம் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.