கமுதி அருகே முத்துக்காளியம்மன் மாசிக்களரி திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள திருவரை கிராமத்தில் செல்வ விநாயகா், முத்துக்காளியம்மன், தா்மமுனீஸ்வரா் கோயில் மாசிக்களரித் திருவிழா கடந்த 24 -ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக திங்கள்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 25 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
முதல் மூன்று இடங்களை பெற்ற மாட்டு வண்டி பந்தய வீரா்களுக்கு ரொக்கப் பணம், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியினை கமுதி, சாயல்குடி, கோவிலாங்குளம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.