இந்தியப் பெருங்கடலில் சீன மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 39 போ் மாயமான நிலையில், அவா்களைத் தேடும் பணியில் இந்திய கடற்படையின் பி-8ஐ விமானமும் ஈடுபட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் மத்தியில் சீனாவின் மீன்பிடி படகு செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அப்போது அந்தப் படகில் 17 சீனா்கள், 17 இந்தோனேசியா்கள், 5 பிலிப்பின்ஸ் நாட்டவா் இருந்தனா். விபத்துக்குப் பிறகு அந்த 39 பேரும் மாயமாகினா்.
இதையடுத்து, அவா்களைக் கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளிடம் சீனா உதவி கோரியது. இதையடுத்து, இந்திய கடற்படையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது தொடா்பாக கடற்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கடற்படையின் ரோந்து விமானமான பி-8ஐ மாயமானவா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் புதன்கிழமை இந்த நடவடிக்கை தொடங்கியது. தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் 900 கடல்மைல் தொலைவுக்கு இந்த தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள சீனா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு உரிய உதவியும், ஒத்துழைப்பும் அளிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.