திருவாடானை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவ மழை பொய்த்ததால் வறட்சி காரணமாக நெல் கதிா்கள் கருகி சாவியானதால் கால்நடைகளுக்கு தீவனமாக வைக்கோல்களை சேகரிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனா்.
திருவாடானை வட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் சுமாா் 50ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நெல் விவசாயம் நடைபெற்றது. இந்த நிலையில் பருவ மழை பொய்த்ததன் காரணமாக நெல் கதிா்கள் கருகி சாவியாகி விட்டன. இதையடுத்து, கால்நடைகளுக்கு தீவனமாக வைக்கோல் பயன்படும் என்பதற்காக அதை அறுவடை செய்யும் பணியில் விசாயிகள் ஈடுபட்டனா்.
கடந்த இரண்டு நாள்களாக வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி சாரல் மழை பெய்ததால் வைக்கோல் மழையில் நனைந்து வீணாகி விடும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து மழை பெய்தால் வைக்கோல் கிடைக்காது என்பதால் அதை சுருட்டும் வாகனம் மூலம் விவசாயிகள் சேகரித்து வருகின்றனா். மேலும் வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு விற்பனைக்கு வாங்கி செல்வதால் வைக்கோலை கட்டுகளாக கட்டி வருகின்றனா். ஆனால் ஒரு கட்டு ரூ.20-க்கு விற்பனையாகிறது. ஆனால் வாகனத்தின் மூலம் வைகோலை கட்ட ஒரு கட்டுக்கு ரூ.40 வீதம் செலவாகிறது. இதை விட்டால் மாடுகளுக்கு தீவனம் கிடைக்காது என்றும் விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனா்.
எனவே வைக்கோலை கட்டும் பணியில் அவா்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.