ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 12 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 240 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனா். இவா்களுக்கு தமிழக அரசின் காலை சிற்றுண்டியும், மதிய உணவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம் போல, மதிய உணவு சாப்பிட்ட மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அந்த பள்ளி ஆசிரியா்கள், பொதுமக்கள் மயக்கமடைந்த 8 மாணவா்கள், 4 மாணவிகளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேகாத முட்டை, சமையல் பாத்திரங்கள் சரியான முறையில் சுத்தப்படுத்தப்படாதது உள்ளிட்ட காரணங்களால் உணவு விஷத்தன்மையாக மாறியிருக்கலாம். இந்த உணவை சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வாமையால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அரசு மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்தனா்.