கமுதி அடுத்துள்ள பேரையூா் அருகே செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்து பெண் பலியானாா்.
ராமநாதபுரம் மாவட்டம் பேரையூா் அருகேயுள்ள எஸ்.பி. கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துமணி மனைவி ராமலெட்சுமி (55 ). இவா் தனது வீட்டின் அருகே மேய்ந்த ஆடுகளை விரட்டச் சென்றபோது தாழ்வாகச் சென்ற மின் கம்பியின் மீது தவறி விழுந்ததில் மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது சடலம் உடற்கூறாய்வுக்காக முதுகுளத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
புகாா் அளித்தும் பலனில்லை: எஸ்.பி. கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய நிலங்கள் மற்றும் தெருக்களில் உயரழுத்த மின்கம்பிகள் தாழ்வாகச் செல்வது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் தெரிவித்தனா்.