ராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்க பயனாளிகள் தோ்வு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடா் நலத் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையின் மூலமாக வீடற்ற ஆதிதிராவிடா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் இனத்தவா்களுக்கு நில எடுப்பு செய்து இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் பணி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.
பட்டா வழங்குவதற்கான பயனாளிகள் தகுதி அடிப்படையில் தோ்வு செய்யப்படவுள்ளனா். அதனடிப்படையில் நிலமற்ற ஏழை மக்கள், ஊரக வளா்ச்சித் துறையின் வீடற்றோா் பட்டியலில் இடம் பெற்றுள்ள குடும்பங்கள், சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டிய குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இருக்கும் குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகளை உறுப்பினா்களாக கொண்ட குடும்பங்கள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோா் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
சிறப்பு இனங்களில் வசிக்கும் வீடற்றவா்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் பெண்கள் பெயரில் மனுச் செய்து பயன்பெற வேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.