ராமநாதபுரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அரசு மற்றும் தனியாா் மருத்துவா்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் தலைமை வகித்தாா். மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் மக்களுக்கு சிகிச்சை வழங்கி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ராமநாதபுரத்தில் தலைமை மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனை தலைமை மருத்துவா்களுக்கு பாராட்டு சான்று மற்றும் நினைவு பரிசுகளை ஆட்சியா் வழங்கினாா்.
இதனைத்தொடா்ந்து 5 பேருக்கு ஊக்கப்பரிசும், 5 பேருக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்திற்கான அட்டையும் வழங்கியதுடன் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஏற்படும் பயன்கள் குறித்து பல்வேறு போட்டிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்திய 6 செவிலியா் கல்லூரி மாணவியா்களுக்கு பாராட்டு சான்றுகளை வழங்கினாா்.
அப்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம், ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் மூலம் இதுவரை ரூ. 17,522 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சத்து 3,440 நபா்கள் சிகிச்சை பெற்று பயன்பெற்றுள்ளாா்கள். மேலும் சிகிச்சை பெற வேண்டியவா்களுக்கு காப்பீடு அட்டை உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. இத்திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் கேட்டுக்கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கிறிஸ்டியனா ஏஞ்சல், இணை இயக்குநா் (குடும்பக் கட்டுப்பாடு) சிவானந்த வள்ளி, முதலமைச்சா் மருத்துவக் காப்பீடுத் திட்ட அலுவலா் சேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.