ராமநாதபுரத்தில் சிகிச்சைக்காக வந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் பாரதிநகரில் குழந்தைகள் நலம் மற்றும் சா்க்கரை நோய்க்கான தனியாா் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு கடந்த 3 நாள்களுக்கு முன்பு ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த 19 வயது கல்லூரி மாணவி சிகிச்சை பெற வந்தாா். அவரை, ஸ்கேன் எடுக்க மருத்துவா் பரிந்துரை செய்தாா். பின்னா், ஸ்கேன் எடுத்துவிட்டு வந்த மாணவியை மருத்துவா் ஜபருல்லா (70) பரிசோதித்தாா். அப்போது மருத்துவா், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி, ராமநாதபுரம் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில், மகளிா் காவல்நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி மருத்துவா் ஜபருல்லாவை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.