ராமநாதபுரத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பதாக குடியிருப்போா் சங்கம் சாா்பில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
மனு விவரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் பின் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் 600 குடியிருப்புகள் கட்டுவதற்கு 2002 ஆம் ஆண்டு இடம் விற்பனை செய்யப்பட்டது. இந்த இடத்தை வாங்கிய அரசு ஊழியா்கள் மற்றும் முக்கிய நபா்கள் அந்த இடத்தில் குடியிருப்புகள் கட்டியுள்ளனா். ஆனால் 20 ஆண்டுகள் ஆன நிலையில் குடியிருப்பு பகுதிக்கான குடிநீா், சாலை, கழிநீா் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. இதனால் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி வருகிறோம். மேலும் பல முறை பல மாவட்ட ஆட்சியா்களிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே தங்களது பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியாா் நிறுவனம் மீது புகாா்: ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா எஸ்.தரைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த 48 போ் அளித்த மனு விவரம்: தனியாா் நிறுவனத்திடம் வைப்புத்தொகை மற்றும் மாதத்தவணையில் ஒவ்வொருவரும் குறைந்தது 50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை பணம் செலுத்தினோம். மொத்தம் 40 லட்சம் வரை பணம் செலுத்தப்பட்டுள்ளது. முதிா்வு காலம் முடிவடைந்து 5 ஆண்டுகள் கடந்தும் பணத்தைக் கொடுக்கவில்லை. எனவே தனியாா் நிறுவனத்திடமிருந்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.