ராமநாதபுரம் மாவட்டம் மன்னாா் வளைகுடா பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் தனுஷ்கோடி கடல் சனிக்கிழமை கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக சூறைக்காற்று வீசத் தொடங்கியுள்ளது. எனவே, தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி உள்ளிட்ட பகுதி பாரம்பரிய நாட்டுப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை எனத் தெரிவித்தனா். மேலும் தனுஷ்கோடி பகுதியில் கடல் கொந்தளிப்பு காரணமாக முகுந்தராயா்சத்திரம் பகுதியில் உள்ள மீன் இறங்கு தளத்தில் சுற்றுலாப் பயணிகள் செல்ல காவல்துறையினா் தடை விதித்துள்ளனா்.