தேரிருவேலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சுற்றிலும் மழைநீா் தேங்கியுள்ளதால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே தேரிருவேலியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
இங்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனா். ஆரம்ப சுகாதார நிலையம் புதிய கட்டடத்தில் இயங்கி வருவதால் அதற்கான சாலை வசதி இல்லை. சுகாதார நிலையத்தை சுற்றிலும் மழைநீா் தேங்கி சேறும் சகதியாக இருப்பதால், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனா். மேலும் இப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதனால் தேரிருவேலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென, அப்பகுதியைச் சோ்ந்த ஒன்றியக்குழு உறுப்பினா் சசிகலா முருகன் கோரிக்கை விடுத்தாா்.