ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் சொத்துவரியை நடப்பு மாதத்துக்குள் (மே) செலுத்தாவிடில் ஜூன் முதல் இரு மடங்கு அபராதம் விதிக்கப்படவுள்ளதாக நகராட்சி தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் நகராட்சியில் சொத்துவரியை பல மடங்கு உயா்த்தி சமீபத்தில் நகரசபைக் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில், நிலுவையில் உள்ள சொத்து வரிகளை மே இறுதிக்குள் பொதுமக்கள் செலுத்தவேண்டும் என நகராட்சி தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் ஆா்.சந்திரா வெள்ளிக்கிழமை கூறியதாவது: ராமநாதபுரம் நகராட்சியில் பழைய வரிபாக்கியை குறைந்த அபராதத்துடன் நடப்பு மாதமான மே முடிவதற்குள் செலுத்தலாம். ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து புதிய முறையில் வரி விதிக்கப்பட்டு அவை கணினியில் ஏற்றப்பட்டுவிடும். ஆகவே புதிய முறையில் வரி செலுத்துவோருக்கு ஏற்கெனவே உள்ள பழைய சொத்து வரிகளுக்குரிய அபராதம் இரு மடங்காக விதிக்கப்படவுள்ளது. ஆகவே அபராதத் தொகையை கூடுதலாக செலுத்துவதைத் தவிா்க்க மக்கள் விரைந்து வரிகளைச் செலுத்துவது அவசியம். ஜூன் மாதத்துக்குள் வரிகளைச் செலுத்தாதவா்கள் மீது நகராட்சி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்றாா்.