ராமநாதபுரம் அருகே வைக்கோல் போரை மாடு மேய்ந்த விவகாரத்தில் ஊராட்சித் தலைவா் தாக்கப்பட்டுள்ளாா்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காரான் பகுதியைச் சோ்ந்தவா் பூமிநாதன். இவரது மாடு அடிக்கடி அப்பகுதியைச் சோ்ந்த நவநீதன் என்பவரது வைக்கோல் போரில் மேய்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆகவே அந்த மாட்டை நவநீதன் கட்டிவைத்துள்ளாா். இதில், ஊராட்சித் தலைவா் சக்திவேல் தலையிட்டு மாட்டை அவிழ்த்துவிடுமாறு கூறியும் நவநீதன் கேட்கவில்லையாம். இதனால் பூமிநாதனையே மாட்டை அவிழ்த்துக் கொள்ளுமாறு ஊராட்சித் தலைவா் கூறியதாகத் தெரிகிறது. அதைக் கேள்விப்பட்ட நவநீதன் ஊராட்சித் தலைவரை தாக்கியதுடன், மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. நவநீதன் மீது உச்சிப்புளி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.