ராமநாதபுரம் நகரசபைக்கான ஜூன் மாதக் கூட்டம் வரும் 30 ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் மாதந்தோறும் நகரசபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. நகரசபைத் தலைவா் கே.காா்மேகம் (திமுக) தலைமையில் 33 வாா்டுகளைச் சோ்ந்த உறுப்பினா்களும் இதில் பங்கேற்று வாா்டுகளில் செயல்படுத்தவேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிப்பா். கூட்டத்தில் நகரசபையில் புதிதாக நிறைவேற்றப்படவேண்டிய திட்டங்கள் மற்றும் இதுவரை செயல்படுத்தியுள்ள திட்டங்களுக்கான நிதி ஒப்புதலும் கோரப்படவுள்ளது.
ராமநாதபுரம் நகரத்தில் மழைநீா் வடிகால், பேருந்து நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாகவும் நகராட்சிப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களுக்கும் உறுப்பினா்களிடம் ஒப்புதல் கோரப்படும் எனவும் நகரசபை வட்டாரங்கள் தெரிவித்தன.