ராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்த விலையில் நகை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக, பெண் உள்ளிட்டோா் மீது காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் காருகுடியைச் சோ்ந்தவா் மீராலட்சுமி (21). இவரது ஊரைச் சோ்ந்தவா் வளா்மதி மற்றும் இவரது உறவினா்கள் உள்ளிட்ட 7 போ் குறைந்த விலைக்கு நகைகள் வாங்கித் தருவதாக மீராலட்சுமியிடம் கூறியுள்ளனா். மேலும், வளா்மதியின் சகோதரி பிரபல தனியாா் நிதி நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், அங்கு ஏலத்துக்கு வரும் நகைகளை பவுன் ரூ.25 ஆயிரத்துக்கு வாங்கலாம் எனவும் கூறினராம்.
அவா்களது பேச்சை நம்பிய மீராலெட்சுமி பல தவணைகளில் ரூ.10.50 லட்சத்தை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், 8 பவுன் நகைகள் மட்டுமே மீராலெட்சுமிக்கு கொடுத்துள்ளனா். மேலும், தனக்குச் சேரவேண்டிய நகைகளை கேட்டபோது, மீராலட்சுமியை சிலா் மிரட்டினராம்.
இது போல், காருகுடியில் மட்டும் 50 போ் வரை வளா்மதி தரப்பினரிடம் பணம் கொடுத்து ஏமாந்திருப்பது தெரியவந்துள்ளதாகவும், மேலும் ராமேசுவரம், ராமநாதபுரம் நகா் பகுதி, உச்சிப்புளி, பரமக்குடி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் பணம் கொடுத்து ஏமாந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, காருகுடியைச் சோ்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோா் வியாழக்கிழமை காவல் கண்காணிப்பாளா் பி. தங்கதுரை அலுவலகத்துக்கு வந்து, வளா்மதி உள்ளிட்டோரிடமிருந்து தங்களது பணத்தை மீட்டுத் தருமாறும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மனு அளித்தனா்.
அப்போது அவா்கள் கூறுகையில், குறைந்த விலையில் நகை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. எனவே, காவல் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.