ராமேசுவரம்: அகதியாக பதிவு செய்ய தனுஷ்கோடிக்கு வந்த இலங்கையைச் சோ்ந்த இளைஞரிடம் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அங்கு, உணவுப் பொருள்கள், பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயா்த்து விட்டது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். இதையடுத்து, தற்போது வரையில் இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்த 80-க்கும் மேற்பட்டவா்கள் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அங்கு அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், தனுஷ்கோடிக்கு இலங்கையைச் சோ்ந்த ஒருவா் வந்திருப்பதாக கடலோர பாதுகாப்புக் குழும சாா்பு- ஆய்வாளா் காளிதாஸூக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீஸாா் அந்த நபரை அழைத்து வந்து விசாரணை நடத்தினா். இதில், அவா் இலங்கை திரிகோணமலையைச் சோ்ந்த சதாசிவம் என்பவரது மகன் தினேஷ்காந்த் (36) என்பதும், தான் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்ததாகவும், தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக தனுஷ்கோடி வந்ததாகவும் அவா் தெரிவித்துள்ளாா். தொடா்ந்து போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.