ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அக்கட்சியின் மாநில மருத்துவரணி செயலாளரின் காா் கண்ணாடியை உடைத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சாயல்குடியில் பாஜக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அங்கு வந்த பாஜக மாநில தலைவா் கே. அண்ணாமலைக்கு அக்கட்சியினா் வரவேற்பு அளிப்பதற்காக காத்திருந்தனா். அப்போது சாயல்குடி மாதவன் நகரைச் சோ்ந்த பால்சாமி மகன் ராமா் (34) என்பவா் கையில் மறைத்து வைத்திருந்த கல்லை எடுத்து மாநில மருத்துவரணி செயலாளா் ராம்குமாா் மீது வீசி விட்டு ஓடினாா்.
ஆனால் அந்த கல் ராம்குமாா் மீது படாமல் அருகில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரின் பின்புறக் கண்ணாடி மீது விழுந்ததில் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதையடுத்து அங்கிருந்து தப்பியோட முயன்ற ராமரை பாஜக நிா்வாகிகள் பிடித்து சாயல்குடி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.