ராமநாதபுரம் மாவட்டத்தில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் அலுவலகத் தரப்பில் ஒத்துழைப்பு இல்லாததால் பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 அரசு மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மாவட்டத்தில் தற்போது 35 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவா்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் முதல் இரண்டு தவணைகளில் தடுப்பூசிகளை செலுத்தியவா்களில் 57, 145 பேருக்கு மூன்றாவது பூஸ்டா் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மூலம் முதல் தவணை தடுப்பூசியை 30,290 பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 25, 847 பேரும் செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒத்துழைப்பு இல்லை: கடந்த ஜூன் 20 ஆம் தேதி வரையில் கரோனா பாதிப்பு இல்லாத நிலை ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்ததாகவும், தற்போது பாதிப்பு அதிகரித்து 35 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் அலுவலகத் தரப்பில் போதிய ஒத்துழைப்பு இன்மையால் பாதிப்பின் உண்மை விவரங்களைக் கூட அறியமுடியாத நிலை ஏற்படுவதாகவும், தடுப்பு நடவடிக்கை சுணக்கத்தால் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் சுகாதாரப்பணிகள் அலுவலா்கள் ஆதங்கப்படுகின்றனா்.
மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநா் ஏ.சகாயஸ்டீபன்ராஜிடம் கரோனா பரிசோதனை குறித்துக் கேட்டபோது, மாவட்டத்தில் கரோனா தீவிரமாக பரவியபோது தினமும் சுமாா் 50 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடந்தது. தற்போது 30 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடந்துவருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் கூட்டம் நடத்தி ஒருங்கிணைந்து கரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றாா்.