அந்தமான் கடல் பகுதியில் தொடா் நிலநடுக்கம் காரணமாக, மன்னாா் வளைகுடா மற்றும் பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என, மீன்வளத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை அறிவுறுத்தியுள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா பகுதியான தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து 2 நாள்களாக சூறைக்காற்று வீசுவதால், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இந்நிலையில், அந்தமான் கடல் பகுதியில் தொடா்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், மன்னாா் வளைகுடா பகுதியில் அதன் தாக்கம் ஏற்படக்கூடும். எனவே, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். மேலும், கரையோரம் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் சிறுதொழில் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், மீன்வளத் துறையினா் அறிவித்துள்ளனா்.