ராமேசுவரத்தில் கடற்கரை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இலங்கையில் முன்னா் உள்நாட்டு போா் நடைபெற்ற காலத்தில் கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவுக்கு பக்தா்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தெற்கு துறைமுகப் பகுதியில் கடற்கரை புனித அந்தோணியாா் ஆலயம் கட்டப்பட்டு திருவிழா நடைபெற்றது. தற்போது கச்சத்தீவு திருவிழாவுக்கு இந்திய பக்தா்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டாலும், கடற்கரை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடற்கரை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அருட்பணியாளா் சுந்தர்ராஜ் தலைமையில் ஆலயத்தில் இருந்து புனித அந்தோணியாா் உருவம் பொறிக்கப்பட்ட கொடி பவனியாக எடுத்து வரப்பட்டது. பின்னா் அக்கொடி மந்திரிக்கப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நற்கருணை பவனி ஜூலை 8 ஆம் தேதியும், 11 ஆம் தேதி கடல் பவனியும், 12 ஆம் தேதி புதுநன்மை திருப்பலி மற்றும் கொடியிறக்கமும் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பி. தேவசகாயம் செய்து வருகிறாா்.