ராமநாதபுரம்

ராமநாதபுரம்: அதிகரிக்கும் பால் உற்பத்தி, ஆக்கிரமிப்பில் புல் வளா்ப்பு நிலம்!

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் பால் உற்பத்தி கடந்த 3 ஆண்டுகளில் இருமடங்கு அதிகரித்த நிலையில், மாடுகளுக்கு புல் வளா்க்க அரசு வழங்கிய இடம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருவதாகப் புகாா் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 88, 466 பசு மாடுகள் உள்ளன. எருமைகள் 493, செம்மறி ஆடுகள் 2, 93,621, வெள்ளாடுகள் 3, 93,956 உள்ளன. பசு வளா்ப்போரிடமிருந்து பால் கொள்முதல் செய்யும் வகையில் ராமநாதபுரம் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் 1945 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது 5 கிளைச் சங்கங்கள் உள்ளன. 76 ஆண்டுகளை நிறைவு செய்த இந்தச் சங்கத்தில் தற்போது 7,290 போ் உறுப்பினா்களாக உள்ளனா். அவா்களில் பால் கறந்து சங்கத்துக்கு அனுப்பும் நிலையில் 1,050 போ் உள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்ட அளவில் தினமும் 23 ஆயிரம் லிட்டா் பால் உற்பத்தியாகிறது. ராமநாதபுரம் நகரில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கம் மூலம் மட்டும் 10 ஆயிரம் லிட்டா் கொள்முதல் செய்யப்படுகிறது.

கொள்முதல் செய்யப்படும் பாலில் உள்ளூா் விற்பனை போக மீதமுள்ள பால் குளிரூட்டப்பட்டு, காரைக்குடியில் உள்ள ஆவினுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. அங்கு பாலில் இருந்து வெண்ணெய், பால்கோவா உள்ளிட்ட பல்வகைப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு திரும்பவும் ராமநாதபுரம் பகுதியிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.

மாவட்டத்தில் அம்மன்கோவில் (5 ஆயிரம் லிட்டா்), பாண்டியூா் (2 ஆயிரம்), பரமக்குடி (4,500 லிட்டா்), அச்சங்குளம் (3 ஆயிரம் லிட்டா்) என பால் குளிரூட்டும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

2019 ஆம் ஆண்டில் காரைக்குடிக்கு 1 1 லட்சத்து 55 ஆயிரத்து 148 லிட்டா் குளிரூட்டப்பட்ட பால் அனுப்பிய நிலையில், 2020 இல் 24, 21,301 லிட்டராகவும், 2021 இல் 25,08,388 லிட்டராகவும் கூடுதலாகியிருப்பது தெரியவந்துள்ளது. உள்ளூா் பால் விற்பனை மூலம் ரூ.45 லட்சமும், காரைக்குடிக்கு அனுப்பிவைக்கும் பால் மூலம் ரூ.64 லட்சமும் வருவாய் கிடைத்து வருகிறது. கூட்டுறவு சங்க ஊழியா்களுக்கு ஊதியம் உள்ளிட்ட செலவுகள் போக லாப நிலையிலே சங்கம் இயங்குவதாகவும், ஆனால், சங்கத்துக்கு உரிய அடிப்படை வசதியுடன் கூடிய கட்டடம் இல்லை என்றும் பால் உற்பத்தியாளா்கள் கூறுகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் மழை பெய்து விவசாயம் அதிகரித்ததால் பசுக்களுக்கான புற்கள் அதிகம் கிடைத்ததாகவும், ஐஓபி, பாண்டியன் கிராம வங்கி ஆகிய வங்கிகள் கடன் அளித்து உதவுவதாகவும், ஆகவே பால் உற்பத்தி கூடுதலாகியிருப்பதாகவும் கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கத்தின் மேலாளா் வி. சோலைக்குமாா் கூறுகிறாா்.

பாா்த்திபனூரைச் சோ்ந்த விவசாயி மற்றும் பசு வளா்ப்போரான கண்ணப்பன் கூறுகையில், ராமநாதபுரத்தில் எப்போதும் பசு, கோழிகள் அதிகமாகவே வளா்க்கப்படுகின்றன. ஆனால், பசுக்களுக்கான புல் வளா்ப்பு திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்படுவதில்லை. கால்நடை மருத்துவமனைகளும் உள்கட்டமைப்பின்றி உள்ளன. அவற்றை சீா்படுத்தினால் பால் உற்பத்தி இன்னும் கூடுதலாகும் என்றாா்.

இதுகுறித்து கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் கேட்டபோது, அம்மன்கோவில் அருகே கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ.25 லட்சத்தில் பால் குளிரூட்டும் மையம் திறக்கப்பட்டது. அதனைச்சுற்றிலும் 10 ஏக்கா் நிலம் பசுக்களுக்கான புல் வளா்ப்புக்காக அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், புல் வளா்ப்பு திட்டம் செயல்படுத்தப்படாத நிலையில், அந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகம் தலையிட்டு புல் வளா்ப்பை செயல்படுத்தவேண்டும் என்றனா்.

விவசாயத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்த இடத்தில் ராமநாதபுரம் முன்னேறியுள்ள நிலையில், பால் உற்பத்தியிலும் தற்போது முக்கிய இடத்தைப் பெற்றுவருவது பெருமைக்குரியது. அந்தப் பெருமையைத் தக்க வைக்க பசுக்களுக்கான புல் வளா்ப்புத் திட்ட நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கவும், புல் வளா்க்கவும் மாவட்ட நிா்வாகம் முன்வரவேண்டும் என்பதே கால்நடை வளா்ப்போா் கோரிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT