வங்கி மோசடி வழக்கில் அதன் முன்னாள் மேலாளா் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப் பிரிவினா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
மதுரை மாவட்டம் சம்பக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் எம். பிரமோத். இவா் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை பரமக்குடியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் மேலாளராக இருந்தாா். அப்போது பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை பல்வேறு வங்கி வாடிக்கையாளா் கணக்கில் வரவு வைத்தும், அந்தப் பணத்தை தவறுதலாக வரவு வைக்கப்பட்டதாக வாடிக்கையாளா்களிடம் கூறியும் வசூல் செய்துள்ளாா். அந்த வகையில் ரூ.8.09 லட்சம் வரை பெற்று மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக துறை ரீதியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு பிரமோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இந்நிலையில் இதுகுறித்து வங்கியின் தூத்துக்குடி மண்டல முதன்மை மேலாளா் ஸ்ரீராம் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் பிரமோத் மீது மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளா் எம். மாரீஸ்வரி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.