திருவாடானை: திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதியில், கடும் பனிப் பொழிவு நிலவுவதால் மிளகாய் விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
ஆா்.எஸ். மங்கலம், பாரனூா், ஆவரேந்தல், மங்கலம், தும்படாகோட்டை, சோழந்தூா், சனவேலி, புல்லமடை, சிலுகவயல், இருதயபுரம், செங்குடி, எட்டியதிடல், வண்டல் வரனி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல்லுக்கு அடுத்தாற் போல் மிளகாய் விவசாயம் சுமாா் 400 ஏக்கா் பரப்பளவில் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, தொடா் மழை காரணமாக மிளகாய் செடிகள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது கடந்த 3 நாள்களாக கடும் பனிப்பொழிவு நிலவுவதால் இதிலுள்ள பூக்களில் பனித்துளிகள் தேங்கி அழுகத் தொடங்கியுள்ளன. இதனால் காய்கள் விடாமல் கருக ஆரம்பித்து விடும் எனவும், ஏக்கருக்கு ரூ. பல ஆயிரம் நஷ்டம் ஏற்படும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.