வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக, கடந்த 3 நாள்களாக மீன் பிடிக்கச் செல்ல முடியாததால் ராமேசுவரம் மீனவா்களுக்கு ரூ. 10 கோடி வரையில் இறால் மீன் ஏற்றுமதி வா்த்தகம் பாதிக்கப்பட்டது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியது. இதனால் கடலில் காற்று அதிகளவில் வீசக் கூடும் என்பதால் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியது.
இதன் காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடந்த புதன்கிழமை முதல் மீன் பிடிக்கச் செல்ல மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை தடை விதித்தது.
இதையடுத்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி,சோளியகுடி, கீழக்கரை, ஏா்வாடி, மூக்கையூா் உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களிலிருந்து 1,700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் 3 நாள்களாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தப்படவில்லை.
இதேபோல, 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் செல்லவில்லை. இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு ரூ. 10 கோடி வரையில் இறால் மீன் ஏற்றுமதி வா்த்தகம் பாதிக்கப்பட்டது. தொடா்ந்து மீன் பிடிக்கச் செல்ல முடியாததால் மீனவா்கள் அவதியடைந்து வருகின்றனா்.