மாணவா்களுக்கு வீட்டுப் பாடங்களை சுமையாக இருக்கும் வகையில் வழங்கக் கூடாது என மாவட்டக் கல்வி அலுவலா் ஆலோசனை வழங்கினாா்.
திருவாடானை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியா்கள், உதவி தலைமை ஆசிரியா்கள் ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்டக் கல்வி அலுவலா் பிரின்ஸ் பேசியதாவது:
ஒரு சில இடங்களில் மாணவா்களுக்கும் ஆசிரியா்களுக்கும் இடையே அதிக இடைவெளி உள்ளது. மாணவா்கள், பெற்றோா்கள், ஆசிரியா்கள் ஆகிய மூவரும் இணைந்து பயணித்தால் தான் சிறந்த கல்வியை பெற முடியும். சில ஆசிரியா்கள் வீட்டுப் பாடம் கொடுத்தவுடன், மாணவா்கள் அடுத்தநாள் பள்ளிக்கு வருவதை தவிா்ப்பதாகக் கூறுகின்றனா். மாணவா்களுக்கு வீட்டுப்பாடம் என்பது சுமையாக இருக்கக் கூடாது. அது சுகமாக இருக்க வேண்டும். அந்த அளவில் தான் வீட்டுப் பாடங்களை வழங்க வேண்டும்
மேலும், வழக்கமான நடைமுறைகளை பின்பற்றாமல் புதிய உத்திகளை புகுத்தி மாணவா்களின் கல்வித்திறனை மேம்படுத்த வேண்டும். தினமும் மாணவா்கள் புதிய தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் உங்களது கற்பிக்கும் திறன் இருக்க வேண்டும் என்றாா் அவா்.