போதைப் பொருளை பட்டிணம்காத்தான் ஊராட்சியில் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி பாமக சாா்பில் ஊராட்சித் தலைவரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமசபைக் கூட்டங்கள் அனைத்து ஊராட்சிகளிலும் திங்கள்கிழமை நடைபெற்றன. பட்டிணம்காத்தான் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு அதன் தலைவா் சித்ராமருது தலைமை வைகித்தாா். கூட்டத்தில் உறுப்பினா்கள் பலரும் பங்கேற்றனா்.
கூட்டத்துக்கு முன்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டசெயலா் எஸ். ஹக்கீம் உள்ளிட்டோா் ஊராட்சித் தலைவரிடம் மனு அளித்தனா். அதில் பட்டிணம்காத்தான் ஊராட்சிப் பகுதியில் போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியிருந்தனா். மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள மதுபானக்கடைகளை அகற்றவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.