ராமநாதபுரம் அருகே லாரியில் கடத்திச் செல்லப்பட்ட 900 கிலோ ரேஷன் துவரம் பருப்பு மூட்டைகளை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைப்பற்றினா். இதுதொடா்பாக 3 பேரையும் கைது செய்தனா்.
மதுரை-ராமநாதபுரம் புறவழிச்சாலையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவின் சாா்பு-ஆய்வாளா் அசோக் தலைமையில், தலைமைக் காவலா்கள் குமாரசாமி, தேவேந்திரன் ஆகியோா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அங்கு வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் அதில் 30 மூடைகளில் தலா 30 கிலோ எடையுள்ள 900 கிலோ ரேஷனில் விநியோகிக்கும் துவரம் பருப்பு கடத்தப்பட்டது தெரியவந்தது. ராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கு கடத்திச் செல்லப்பட்ட துவரம் பருப்பு மூட்டைகளை கைப்பற்றிய அவா்கள், லாரியில் இருந்த மதுரையைச் சோ்ந்த ஜெயராஜ் (62), ஓட்டுநா் மதுரை வீரன் (38), வண்டியூரைச் சோ்ந்த சுமைதூக்கும் தொழிலாளி செல்வம் (42) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.