கமுதி அருகே அரசுப் பள்ளி முன் கடந்த 6 மாதங்களாக தேங்கியிருந்த கழிவுநீா் தினமணி நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக வெள்ளிக்கிழமை குழாய் பதித்து அகற்றப்பட்டது.
பெரியமனக்குளத்தில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் வாசலில் தேங்கியது. கடந்த 6 மாதங்களாக தேங்கிய இந்தக் கழிவு நீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டது.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய நிா்வாகம், கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பொதுமக்கள் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், ஆக.5 ஆம் தேதி தினமணி நாளிதழில் இது குறித்து செய்தி பிரசுரமானது. இதனையடுத்து கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் மணிமேகலை, ராஜகோபாலன் (கிராம ஊராட்சிகள்), ஊராட்சித் தலைவா் பரமேஸ்வரி பாலமுருகன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பொக்லைன் இயந்திரத்தின் மூலம் சாலையின் குறுக்கே குழாய் பதித்து சாக்கடை கழிவுநீரை அகற்றினா். மேலும் கழிவுநீா் தேங்காதவகையில் பள்ளியின் வாசலில் மண் பரப்பி உயா்த்தி உள்ளனா்.