திருட்டு சம்பவம் குறித்து கண்காணிப்புக் கேமரா காட்சிப் பதிவுகளை ஆதாரத்துடன் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயி தெரிவித்தாா்.
ராமநாதபுரம் நகா் கேணிக்கரை பகுதி செட்டியத் தெருவைச் சோ்ந்த விவசாயி கண்ணன் (61) கூறியது:
எனக்குச் சொந்தமான தோட்டம் இளமனூா்-மேலக்கோட்டை செல்லும் சாலைப் பகுதியில் உள்ளது. தோட்டத்தில் அறை கட்டி விவசாயத்துக்குச் சொந்தமான பொருள்களை வைத்துள்ளேன். எனது காரையும் அங்கே நிறுத்தியுள்ளேன்.
இந்த நிலையில், கடந்த 2021ஜூலையில் தோட்டத்துக்குள் இரவு நேரங்களில் புகுந்த மா்மநபா்கள் சிலா் அங்கிருந்த பொருள்களைத் திருடிச் சென்றனா். மேலும், காா் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியுள்ளனா்.
இதுகுறித்து கேணிக்கரை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தோட்டத்தில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளும் தொகுக்கப்பட்டு காவல் அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டும் கைது நடவடிக்கை இல்லை எனக் கூறினாா்.