ராமநாதபுரம் மாவட்டத்தில் விடுதிகள் நடத்துவோா் பதிவு செய்யாவிடில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளைகள், சங்கங்கள் மற்றும் மதம் சாா்ந்த நிறுவனங்கள், கல்லூரிகள், தொழில் கல்வி பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், குழந்தைகள் இல்லம், பள்ளி, கல்லூரிகளால் நடத்தப்படும் தற்காலிக விடுதிகளையும் பதிவு செய்திருக்கவேண்டும். இதற்காக சமூக நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் பதிவு செய்யத் தவறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன்படி விடுதி உரிமையாளா் அல்லது மேலாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுவதுடன் விடுதி உரிமமும் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.