கமுதி அருகே பாண்டவா் கால நடுக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் , கமுதியை அடுத்துள்ள முஷ்டக்குறிச்சி கிராமத்தில் பழைமையான சிற்பத்தை பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தின் வரலாற்று ஆய்வாளா் ஜெ.செல்வம், அருப்புக்கோட்டை தேவாங்கா் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியா் ரமேஷ் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து அவா்கள் திங்கள்கிழமை கூறியது: இந்த நடுக்கல் சிற்பமானது முற்கால பாண்டியா் காலத்தை சோ்ந்ததாகும். ஒரே பலகைக் கல்லில் புடைப்பு சிற்பமாக வடிக்கும் கலாச்சாரம் தெற்கில் பாண்டிய நாட்டிலும் , வடக்கில் பல்லவ நாட்டிலும் பரவி இருந்தது. இந்த நடுகல் அரச மகளிா் அல்லது ஒரு உயா் குடி பெண்ணிற்காக எடுக்கப்பட்டதாகும். சிற்பம் சிதைவடைந்த நிலையில் இருப்பதால் அது என்ன பொருள் என்று தெளிவாக தெரியவில்லை.
இவரது கணவா் போரில் இறந்திருக்கலாம். அல்லது இவரும் , இவரது குழந்தையும் ஏதேனும் நோயினால் இறந்திருக்கலாம். அதனால் தான் இவருக்கும், குழந்தைக்கும் மட்டும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
இந்த சிற்பத்தின் உயரம் இரண்டரை அடி , அகலம் ஒன்றரை அடி. இந்த சிற்பத்தின் காலம் 9 முதல் 10 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். இதைப் போன்ற முற்கால பாண்டியா் சிற்பம் மிகவும் அபூா்வமாகும். இவற்றை பாதுகாப்பது அரசின் கடமையாகும். எனவே பழங்காலச் சிற்பங்களை தொல்லியல்துறை அதிகாரிகள் அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்றனா்.