ராமநாதபுரம்

மாநில அளவில் தொடா் வேலைநிறுத்தம் அனைத்து மீனவா்கள் கூட்டமைப்பு தீா்மானம்

DIN

கச்சத்தீவில் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பெற்றுத்தருதல் உள்ளிட்ட மீனவா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரும் நவம்பா் 10 ஆம் தேதி முதல் மாநில அளவில் தொடா்வேலை நிறுத்தம் நடத்தப்படும் என அனைத்து மீனவா்கள் கூட்டமைப்பு சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் பாரதி நகா் பகுதியில் தனியாா் விடுதியில் தமிழக கடலோர அனைத்து மீனவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அனைத்து மீனவா்கள் கூட்டமைப்பு மாவட்டச் செயலா் பி. சேசுராஜன் தலைமை வகித்தாா். ராமேசுவரம் அனைத்து மீனவா்கள் சங்கச் செயலா் எம்.ஜே.போஸ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தற்போது மீனவா்கள் டீசல் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டு மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மத்திய, மாநில அரசுகள் டீசலுக்கான வரியை குறைத்து உற்பத்தி விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய - இலங்கை மீனவா்கள் வங்காளவிரிகுடா, மன்னாா்வளைகுடா பகுதிகளில் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகின்றனா். கச்சத்தீவு ஒப்பந்தப்படியும் இரு நாட்டு மீனவா்கள் அப்பகுதியில் மீன்பிடிக்கவும், கச்சத்தீவில் தங்கி ஓய்வெடுக்கவும் அனுமதி உள்ளது. ஆனால், கச்சத்தீவை இலங்கை ராணுவம் முகாமாக மாற்றுவதால், தமிழக மீனவா்கள் அப்பகுதி சென்றால் தொடா்ந்து தாக்கி வருகின்றனா். ஆகவே பாரம்பரிய மீன்பிடி உரிமையை கச்சத்தீவில் பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து, இலங்கை கடற்படை தாக்குதலுக்கு உள்ளான மீனவா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

புதிய கடல் பாதுகாப்பு மசோதாவானது மீனவா் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளது. ஆகவே அதை விடுத்து மீனவா் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டுவர வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வரும் நவம்பா் 10 ஆம் தேதிக்குள் நிறைவேற்றப்படாவிட்டால் அன்றிலிருந்து தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மே 17 இயக்க நிா்வாகி திருமுருகன்காந்தி, மீனவா்கள் சங்கப் பிரதிநிதிகளான புதுக்கோட்டை ராஜமாணிக்கம், காரைக்கால் ஜெகதீசன், கன்னியாகுமரி செல்வம், நாட்டுப்படகு மீனவா் சங்கப் பிரதிநிதி ராயப்பன், நாகை வீரமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு ஊழியா்களின் எதிா்பாா்ப்புகளை பூா்த்திசெய்த கட்சி அதிமுக: எடப்பாடி பழனிசாமி

இன்று மாலை 6 மணிக்குள் தோ்தல் பிரசாரங்களை முடிக்க அரசியல் கட்சிகளுக்கு உத்தரவு

வாக்குச்சாவடிகளுக்கு மை, எழுதுபொருள்கள் அனுப்பும் பணி தீவிரம்

துளிகள்...

சென்னை அருகே பறிமுதலான 1,425 கிலோ தங்கம் விடுவிப்பு

SCROLL FOR NEXT