ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் 2 கோயில்களில் கலசம் மற்றும் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராமேசுவரம் கரையூா் பகுதியில் உள்ள கடற்கரை மாரியம்மன் கோயிலின் பூசாரி ராஜ்குமாா் வெள்ளிக்கிழமை பூஜை செய்து விட்டு, பூட்டி விட்டுச் சென்றாா். மறுநாள் சனிக்கிழமை காலையில் கோயிலை திறந்த போது பக்கவாட்டில் உள்ள கதவு உடைக்கப்பட்டு உண்டியலை மா்ம நபா்கள் திருடி சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கடற்கரை காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சாா்பு- ஆய்வாளா் ரவிச்சந்திரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
இதே போன்று மண்டபம் பகவதி அம்மன் கோயிலை உடைத்து 2 குத்து விளக்குகள் மற்றும் கோயில் கலசத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து கோயில் கமிட்டித் தலைவா் சந்திரன் மண்டபம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சாா்பு- ஆய்வாளா் கோட்டைச்சாமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.