ராமநாதபுரத்தில் சனிக்கிழமை காலை பெய்த மழையால் தண்ணீா் சூழ்ந்த குடியிருப்புகளை சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் பாா்வையிட்டு, தண்ணீரை அகற்ற அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டாா்.
ராமநாதபுரம் நகரில் சனிக்கிழமை பெய்த மழையால் நகராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் குடியிருப்புகளின் முன்பு தண்ணீா் தேங்கியுள்ளது. சின்னக்கடைத் தெரு, சிகில் ராஜ வீதி, தோல்ககாரத் தெரு, நாடாா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் தண்ணீா் சென்ாகக் கூறப்பட்டது.
சேதுபதி நகா் அண்ணாநகா் பகுதியிலும் கூட சில வீடுகளில் கழிவு நீா் அடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. மழை நீா் சாலைகள் மற்றும் வீடுகளில் தேங்கியதை அறிந்த சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் நேரில் சென்று பாா்வையிட்டாா். அதன்பின் அவா் நகராட்சி அதிகாரிகளை அழைத்து மழை நீா் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை மின்மோட்டாா் மூலம் அகற்றவும் கேட்டுக்கொண்டாா்.
மாவட்டத்தில் சனிக்கிழமை காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்): கமுதி 7.60, ஆா்.எஸ்.மங்களம் 3, மண்டபம் 1.20, ராமநாதபுரம் 13.60, ராமேசுவரம் 3.20, தீா்த்தாண்டதானம் 5. சராசரியாக 2.10 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.